2024 ஆம் ஆண்டிற்கான க.பொ. த சாதரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பரீட்சை நிலையத்தில் , அப்பகுதியை சேர்ந்த இரண்டு பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர்.
நேற்றைய தினம் புதன்கிழமை பரீட்சை ஆரம்பமாக இருந்த வேளை இரு பாடசாலைகளின் மாணவர்கள் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதனை பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் , தடுத்து நிறுத்தி , மாணவர்களை கடுமையாக எச்சரித்து , பரீட்சை மண்டபத்தினுள் அனுப்பி பரீட்சை எழுத வைத்தனர்.
பின்னர் முதலாம் பகுதி வினாத்தாள் நேரம் முடிவடைந்து , மாணவர்களிடம் விடைத்தாள்களை பெற்ற பின்னர் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்குவதற்காக இடைவேளை வழங்கப்பட்டது.
அதன் போது, பரீட்சை நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று ஒரு தரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
அதனை அடுத்து மருதங்கேணி பொலிஸாருக்கு , அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தர முன்னர் , வன்முறை கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.