வீடு புகுந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவர் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 24ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூன்று பெண்கள் வீட்டில் இருந்த 639,00 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
மொரட்டுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது, மொரட்டுவ பொலிஸ் பிரிவின் கொரலவெல்ல மற்றும் மொரட்டுவ பகுதிகளில் இந்தக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் நேற்று (03) பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களான குறித்த பெண்கள் மூவரும் 33 மற்றும் 47 வயதுடைய கொரலவெல்ல மற்றும் மொரட்டுவெல்ல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட சில பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.