உலகளவில் பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கைப் பாடகி சினேகா சரிகமபவிலிருந்து வெளியேறி இன்று தனது நாட்டை வந்தடைந்துள்ளார்.
தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 தற்போது ஆரம்பமாகி பிரம்மாண்டமாக இடம்பெற்று வருகின்றது.
இதில் இலங்கை – மலையகத்தைச் சேர்ந்த சினேகா கலந்துகொண்டு சிறப்பான பாடல்களைப் பாடி பாராட்டைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் மலையகத்தைச் சேர்ந்த சினேகா உடுத்தும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.
ஆடை மீதான பலரது விமர்சனங்கள் தன்னை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியதால் சரிகமப நிகழ்விலிருந்து வெளியேறிய பாடகி சினேகா இன்று தனது தாயகமான இலங்கையை வந்தடைந்தார்.
தாய்நாட்டை வந்தடைந்த சினேகாவை அவரது குடும்பமும் உறவினர்களும் ஆதரவாளர்களும் மாலை அணிவித்து வரவேற்றனர்.
அதன்பின்னர் இசைநிகழ்ச்சி பற்றியும் அவர் வெளியேறியது பற்றியும் அவரைக் கேட்டபோது, எனது ஆடைகள் தொடர்பில் வெளியான விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன்.
அதனால் சரிகமபவில் என்னால் பாடலை பாடமுடியவில்லை. சரிகமப குழுவினர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவளித்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பாடலைப் பாடு என்று ஊக்கமளித்தனர்.
இருப்பினும் என்னால் பாடல் சுற்றில் சிறந்த முறையில் பாடமுடியவில்லை. இதனாலேயே நான் வெளியேறி வந்துள்ளேன் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.



















