இந்திய பிரதமர் நரேந்திர மோடி 7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு பயணம் செய்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் சீனாவுக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் குறித்த மாநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் மோடியுடன் யுக்ரைனின் ஜனாதிபதி செலேன்ஸ்கி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
சீனாவில் மோடி ஷாங்காய் மாநாட்டுக்காக வருகைதரும் ரஸ்ய ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, யுக்ரைனின் நிலைப்பாடு தொடர்பாகவும், ரஸ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் தொடர்பாகவும் செலேன்ஸ்கி, மோடியுடன் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக ரஸ்யாவுடன் நெருங்கிய உறவை இந்தியா பேணி வரும் நிலையில், மோடியுடன் செலென்ஸ்கி நடத்திய இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவும் சீனாவும் புதிய கொள்கைகளை வகுக்கும் நிலை உருவாகியுள்ளதாக ராஜதந்திர தரப்புக்கள் கூறுகின்றன.
யுக்ரைன் தாக்குதலை மையப்படுத்தி ரஸ்யாவுடன் உறவைக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி அதிக வரியை விதித்துள்ளார்.
அதேநேரம் ரஸ்யாவின் மற்றுமொரு நட்பு நாடான சீனாவுக்கும் ட்ரம்ப் அதிக வரியை விதித்துள்ளார்.
இந்தநிலையில் தமது பொருளாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் சீனாவும் இந்தியாவும் புதிய வியூகங்களை வகுக்கவேண்டிய நிலை எழுந்துள்ளதாக ராஜதந்திர தரப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.




















