திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மேலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்றது.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி திருகோணமலை சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
இவ் வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், கேசவன் சயந்தன் ஆகியோர்கள் ஆஜரானதுடன், இடை புகு மனுதாரர் சார்பில் எஸ்.புஞ்சிநிலம, ஏ.எஸ்.எம்.ரபீஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
கன்னியா வெந்நீரூற்று வழக்கில் இடைபுகுனர்கள் தொடர்பாக இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது, அதில் வில்கம் விகாரை விகாராதிபதி தானும் ஒரு இடைபுகு மனுதாரராக தன்னை அனுமதிக்கவேண்டும் என விண்ணப்பித்திருந்தார்.
இதனை எதிர்த்து வாதாடிய மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வில்கம் விகாரை விகாராதிபதிக்கு இதில் எந்தவித சட்டபூர்வமான உரித்தும் கிடையாது என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூல ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும், பெப்ரவரி 25ஆம் திகதி குறித்த தினத்தில் இடைபுகு சம்பந்தமான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.