மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து அவரிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,“மத்தியவங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேக நபரான அர்ஜூன் மகேந்திரனை திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு செல்லவதாக குறிப்பிட்டு, அவரை நாட்டிலிருந்து வெளியேற உதவியவர் ரணில் விக்ரமசிங்கவே பிரதான சந்தேக நபர் இல்லாததால் அவர் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ரணில் விக்ரமசிங்கவையே கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முறைக்கேடுகள் தொடர்பில் தற்போது சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில் அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இதனிடையே, ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் அவருக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது , அதனுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்”என அவர் மேலும் கூறியுள்ளார்.