ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இரகசியமான முறையில் தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பொதுஜன பெரமுனவுடன் இரகசிய தொடர்புகளைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்னற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.தேகவின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே தலைமைத்துவப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதனாலும் இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ரணில் ஆதரவு அணி, சஜித் ஆதரவு அணியென உறுதியான முறையில் பிளவுபட்டுள்ள நிலையிலுமே ஐ.தேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்ப கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றி குழப்படைந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதின்மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே தென்படுகின்றது.
இதன்காரணமாக ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே தலைமைத்துவ மோதல் தீவிரமடைநது விட்டதால் ஐ.தேகவிற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் ஆதரவு மேலும் சிதறடிக்கப்படலாம்.
ரணில், சஜித் தலைமைத்துவ மோதல் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.த.கவின் எதிர்காலமும் வெற்றி வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றி நம்பிக்கையிழந்து வருவதாகவும் இந்த நிலையில் மாற்று வழியாக அவர்கள் பொதுக்கூட்டணியுடன் இரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ இணைந்து கொள்ள முயற்சிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.