யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபரின் வீட்டிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் , அதனைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதாகியுள்ளார்.
சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்த பொலிஸார் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பில் வசித்துவந்த நிலையில் திருமணத்தின் பின்னர் யாழில் வசித்து வருகிறார்.
கைதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.