இனியும் தமிழ் தலைவர்கள் தூங்கி இருக்க முடியாதவாறு எதிரி தமிழ் தலைவர்களை தட்டி எழுப்பி உள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரும் போராட்டங்களை அவர்களின் உறவினர்களே இதுவரை நடத்தி வந்தனர். அரசியல் தலைவர்கள் பெருமளவுக்கு இதில் பங்கு எடுக்காது காணப்பட்டனர்.
தலைமை தாங்க வேண்டிய அரசியல் தலைவர்கள் வசதியாக அரசாங்கத்தோடு கைகோர்த்து செயல்பட்டு வந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரைக் தேடுவதற்கான ஒரு செயலகத்தைத் திறந்துவிட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தினரும் அவர்களது கூட்டாளிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கண்ணாம்பூச்சி ஆடினர்.
ஆனால் இப்போதும் காணாமல் ஆக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட அனைவரும் இறந்துவிட்டனர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இது பற்றி பிபிசி தமிழோசை இணையதளம் பின்வருமாறு செய்தியை பதிவு செய்துள்ளது:
“இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டனர்’ – கோட்டாபய ராஜபக்ஷ”
“கடந்த பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை.
கொழும்பில் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் உடனான சந்திப்பின்போது கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் பாதுகாப்பு படைகளின் வசம் உள்ளதாக அவர்களது உறவினர்கள் நம்புகின்றனர். ஆனால், அதை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.
” காணாமல் போனவர்கள் விவகாரத்தை தீர்ப்பதற்கான தமது திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ விவரித்தார். அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை விவரித்தார்,” என பிபிசி தமிழோசை இணையதளத்தில் செய்தி பதிவாகியுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி மிகத்தெளிவாக வெளிப்படையாக இலங்கைக்கான ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் கூறிய பின்பும் தமிழ் தலைவர்கள் இன்னும் தூக்கம் கலையாது இருக்கிறார்கள்.
யுத்தத்தின்போது போரில் கொல்லப்பட்டோர் என்பது வேறு, சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வேறு.
இவ்வாறு இந்த உயிருடன் கைது செய்யப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் இந்தக் கொடூரமான இனப்படுகொலையை எந்த வழியிலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
முன்னறிவித்தலுடன் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் திரு எஸ். நடேசன் தலைமையில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபகீர்த்திமிக்க படுகொலை ஒருபுறமிருக்க சரணடைந்தும் கைது செய்யப்பட்டும் இருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வந்தனர்.
ஆனால் தற்போது அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டனர் என்ற படுகொலை செய்தியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் பல சிறுவர்களும் உள்ளடங்குவர்.
விடுதலைப்புலிகளின் கல்வி பொறுப்பாளராக இருந்த திரு பேபி சுப்பிரமணியம் அமைதியும் சரணடைந்த போது கூடவே அவர்களது 8 வயது சிறுமியும் சரணடைந்தாள்.
அவ்வாறே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விளையாட்டுத் துறை உதவி பொறுப்பாளர் திரு. ராஜா சரணடைந்த போதும் அவருடன் கூடவே 10 வயதுக்குட்பட்ட அவரது மூன்று சிறுவர்களும் சரணடைந்தனர்.
இவ்வாறு சரண் அடைந்திருக்கக்கூடிய ஏனைய சிறுவர்களும் மேற்படி அரசின் படுகொலை பட்டியலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனைச் சிறுவர் படுகொலை பட்டியல் என அழைக்கவேண்டும்.
இந்நிலையில் களத்தில் இருக்கும் தமிழ் தலைவர்கள் முதலில் பாரிய நேரடிப் போராட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர். ஆதலால் சிறிதும் தாமதிக்காது தலைவர்கள் தாங்களே நேரடியாக போர்க்களம் இறங்க வேண்டும்.
அரசாங்கத்துடன் இணைந்து முண்டு கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இதற்கான பொறுப்பு மிக மிக அதிகம். இனியும் எந்தவிதமான ஒரு சாக்குப் போக்கும் சொல்ல முடியாது.
காணாமல் ஆக்கப்பட்டோர் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை முதலில் சொல்ல வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் இறந்துவிட்டார் என்று கூறி எனது வழிக்கு அவர்கள் எவ்வாறு இருந்தது என்பதை விவரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்று கப்பல் தலைவர்கள் முதலில் போர்க்களம் புகவேண்டும்.
துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனரா, அடித்துக் கொல்லப்பட்டனரா, வெட்டிக் கொல்லப்பட்டனரா, நச்சு வாயுக்களால் கொல்லப்பட்டனரா, அல்லது உகண்டாவில் இடி அமீன் இனிய மீன் செய்வது போல தலையில் இரும்புச் சுட்டியல்களால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டனரா என்ற விபரங்களை இவர்கள் சொல்லியாக வேண்டும்.
அடுத்து கொல்லப்பட்ட இடங்கள் எவை, அவ்வாறு கொண்ட கொலையாளிகள் யார், அத்தகைய படுகொலைகளுக்கு கட்டளையிட்ட அவர்கள் யார், மொத்தத்தில் இப்படுகொலைகள் அனைத்திற்கும் பொறுப்பாளிகள் யார் கேள்விகள் அனைத்தும் முக்கியமானவை.
இவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்கள் புதைக்கப்பட்டனவா , எரிக்கப்பட்டனவா அல்லது மிருகங்களுக்கு உணவாக்கப்பட்டனவா என்ற கேள்விகளுடன் கூடவே முக்கியமானவை.
இவை அனைத்தையும் முன்னிறுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மற்றும் சர்வதேச அரங்கங்களிலும் தமிழ்த் தலைவர்கள் போராட வேண்டும். இவ்வகை போராட்டத்தில் தலைவர்களையே தமிழினம் தற்போது எதிர்பார்க்கிறது.
நாடாளுமன்ற நாற்காலிகளுக்காகவும் பதவிகள் மற்றும் வசதிகளுக்காகவும் பாடுபடும் சுயநலங்கொண்ட தலைவர்களைவிடுத்து போராடவல்ல தலைவர்கள் எழவேண்டிய காலம் இது.
ஒரே நேரத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை தமிழ் முன்னின்று நடத்த வேண்டும்.
மேலும் பல்வகையான புதிய புதிய போராட்ட முறைகளை அடையாளங்கண்டு அவற்றையெல்லாம் முன்னெடுத்து காணாமல் ஆக்கப்பட்டோர் படுகொலையை அனைத்து வழிகளிலும் அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் விடுதலைக்கு இதனை ஒரு ஊன்றுகோலாக வேண்டும்.
எதிரிக்கு உள்ள நெருக்கடிகளின் பின்னணியில் தற்போது எதிரி தனக்கு எதிராக போராடுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளார்.
அண்மையில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் அவையின் மாநாட்டை ஒட்டி இவ்விவகாரம் அதிகம் சூடுபிடித்துள்ளது. ஆதலால் இந்த வாய்ப்பை சரிவர முன்னெடுக்கவேண்டும்.
உள்நாட்டில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் தலைவர்களும் தங்களுக்கு இடையேயான அனைத்து வகைப் பேதங்களையும் மறந்து ஒற்றைக் குறிக்கோளுடன் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
அவ்வாறே வெளிநாட்டிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களில் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டும். ஜனநாயக வழியில் போராட சர்வதேச அரங்கில் நிச்சயமாக இடமுண்டு.
உள்நாட்டிலும் தற்போது காணப்படும் தேர்தற் சூழற் பின்னணியில் போராடுவதற்கான களம் இலகுவாக உண்டு. எப்படியோ ஜனநாயக வழிகளில் போராடும் போது இலங்கை அரசால் அதனை கண்டபடி தடுக்க முடியாது.