முஸ்லிம் காங்கிரசின் இனவாத, பிரதேசவாத செயற்பாடுகளினால் இன்று கல்முனையில் துண்டாடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதென உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற உயர் பீட ஒன்று கூடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது கட்சி ஆரம்பித்த காலம் தொட்டு நாம் முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சிப்பதாக எம்மை குற்றம் சாட்டியவர்கள் இப்போது புரிந்து கொண்டார்கள் நாம் சொன்னவை சரிதான் என்று.
கல்முனையை பொறுத்தவரை பல இனங்களும் பல ஊர்களும் கொண்ட ஊராகும். இங்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது இருப்பை காக்க கல்முனையில் பிறைக்கொடியா,புலிக்கொடியா என பேசி இனவாதத்தை விதைத்து தமிழ் முஸ்லிம் வெறுப்பை விதைத்தனர்.
பின்னர் மு. கா தலைவருக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் இடையிலான ஐ.தே கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரும் கள்ளத்தனமான உறவு காரணமாக தமிழர்களுக்கெதிரான இனவாதம் பேச முடியாமை காரணமாக சகோதர சாய்ந்தமருது முஸ்லிம்களுக்கெதிராக பிரதேச வாதத்தை விதைத்தனர்.
அப்போது யார் அதிகம் விருப்பு வாக்கு பெறுகிறாரோ அவர் மேயர் என மு. கா தரப்பால் சொல்லப்பட்டதால் அதன் படி வெற்றி பெற்ற சாய்ந்தமருது வேட்பாளருக்கு அதனை கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் குரங்கு அப்பம் பங்கு வைத்து பூனைகளை ஏமாற்றியது போன்று ஹக்கீம் இரு ஊர்களையும் மூட்டிவிட்டார். ஹக்கீமின் இந்த குள்ளத்தனத்துக்கு கல்முனை மு. கா ஆதரவாளர்களும் துணைபோனதன் விரக்தியே சாய்ந்தமருது சபை போராட்டமாகும்.
இவ்வாறு பல துரோகங்களை கல்முனைக்கு செய்த முஸ்லிம் காங்கிரசையும் ரவூப் ஹக்கீமையும் ஓரம் கட்டி கல்முனை தலைமையிலான கட்சியை பலப்படுத்தாதவரை கல்முனை முஸ்லிம்கள் தொடர்ந்தும் இழப்புக்களை சந்திக்க வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளார்.