நடிகர்கள் போல மணமகன் வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் குள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் விக்னேஷ்வரன் (25). சுமார் 4 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர் தன்னம்பிக்கையுடன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
அவருக்கு சிவகங்கையை சார்ந்த பவித்ரா (24) என்ற இளம்பெண் பேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமானார்.
பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக அவர்களது பழக்கம் காதலாக மாறியது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அறிந்த பெண் வீட்டார் உனக்கும், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லை. எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவரை மறந்து விடு என்று வற்புறுத்தினர்.
ஆனாலும் மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர், உற்றார் உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து நேற்று கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து இருவரது பெற்றோரையும் வரவழைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டு சென்றனர்.
ஆனால் விக்னேஷ்வரன் குடும்பத்தினர் பவித்ராவை ஏற்றுக்கொண்டதால் அவர் அதிரடியாக பெற்றோரை பற்றி கவலைப்படாமல் புதுவாழ்வை தொடங்க உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.