மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க இல்லாவிட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியும் எனவும் ரிஷாட் பதியூதீன் போன்ற அடிப்படைவாத தலைவர்கள் இன்றி, நாட்டை நேசிக்கும் எவரும் தமது கட்சியில் இணைய முடியும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல்லை பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியும். பெரும்பான்மை பலமின்றியே நாடாளுமன்றத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். நாட்டின் அரசாங்கம் ஸ்திரமில்லை என்றால், வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
கடந்த காலத்தில் தேசிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்தனர். தற்போது முழு நாடும் கடனாளி. நாட்டின் தேசிய பாதுகாப்பை இல்லாமல் செய்ய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கியவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
பின்னர் அவர் மாறினாலும் மக்களிடம் அவர் மீது விருப்பமில்லை. நாங்கள் மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவோம். நாட்டின் பிரபலமான சின்னம் என்பதால், மொட்டுச் சின்னத்தை எவரும் எதிர்க்க மாட்டார்கள் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.