கொரோனா வைரஸ் தடுப்பூசி சில மாதங்களுக்குள் பயன்பாட்டில் கிடைக்கக்கூடும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை மேலும் பரவாமல் இருக்கத் தேவையான ஆயத்த நடவடிக்கைகளை தமது குழுவுடன் தற்போது முழு வீச்சில் முன்னெடுத்து வருவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சோதனைகளுக்கான ஆரம்ப 1,000 டோஸ் மருந்தானது இத்தாலியில் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார மையமானது, கொரோனாவுக்கான மருந்து உருவாக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து முயன்றால் 18 மாதங்கள் வரை ஆகலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் மார்ச் அல்லது மே மாதம் வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் என்ற பீதி உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.
மட்டுமின்றி, தற்போதைய சூழலில் கொரோனா நோய்க்கான மருந்து ஏதும் பயன்பாட்டில் இல்லை.
சீனாவில் கொரோனா பாதிப்பு லேசான மாறுதல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்தாலும், எஞ்சிய உலக நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையிலேயே சாரா கில்பர்ட்டின் குழு, இத்தாலிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தற்போது 1000 டோஸ் மருந்தை மருத்துவ சோதனைக்கு அனுப்பும் வகையில் உருவாக்கியுள்ளது.
இந்த மருத்துக்கு ChAdOx1 nCoV-19 என தற்போது பெயரிட்டுள்ளனர். அடுத்த ஒருசில மாதங்களில் முழு பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய பில்லியன் கணக்கான டொலர்கள் தேவைப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது விரிவான சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ஆனால் அவை விற்கப்படுவதற்கு முன்பு கண்டிப்பாக வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சாரா கில்பர்ட் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு இதுவரை 2,129 பேர் மரணமடைந்துள்ளனர். உலகமெங்கும் 75,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 12,063 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சையில் உள்ளனர். மட்டுமின்றி, சுமார் 16,507 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.