பிரித்தானியாவில் ஒரே இரவில் 10 பேர் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில், ராணி அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் Covid-19 வைரஸானது, கிட்டத்தட்ட 5000 பேரை பலிகொண்டுள்ளது. உத்தியோக தகவல்களின்படி, பிரித்தானியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,140 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
பேராசிரியர் கிறிஸ் விட்டி கூற்றுப்படி, வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரே இரவில் உயிரிழந்த கடைசி 10 பேர், வயது முதிர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கொரோனா வைரஸுக்கு திட்டமிடலின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் நான்கு மாதங்கள் கடுமையான தனிமையில் இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொற்றுநோய் மோசமடைந்துவிட்டதால், பிரித்தானியா மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
93 வயதான ராணி தனது பாதுகாப்பிற்காகவே இன்று விண்ட்சர் கோட்டைக்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
இருவரும் நல்ல நிலையில் இருப்பதாகவும், ராணியை இடமாற்றம் செய்வது சிறந்தது என்று கருதப்பட்டதாலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் அவரது ஊழியர்கள் பலர் கொரோனா வைரஸைப் பற்றி சற்று பீதியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.