கொரோனோ ஆபத்திலிருந்து சிறைக்கைதிகளை பாதுகாக்க தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான மு.கோமகன் கோரியுள்ளார்.
அத்துடன் கைதிகளை பாதுகாக்க போதிய முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுமத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் உலகையே உலுக்கி வரும் கொரோனோ இலங்கையையும் விட்டுவைக்காத நிலையில், அதனை கட்டுப்படுத்த எல்லோரும் ஒன்றிணைந்து முயற்சி எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சிறைச்சாலைகள் பெரும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு வருகின்றதாக கூறிய அவர், புதிதாக கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் எந்தவித உடல் பரிசோதனைகளும் இல்லாமால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலையில் கைதிகளின் சுகாதாரங்கள் உரியமுறையில் பேணப்படவில்லை என்றும் கூறிய மு.கோமகன், இதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறையில் வாடுவதனால் நீரழிவு நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாகவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக கைதிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ளதாகவும், எனவே அவற்றை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலையோ , நிபந்தனைகளின் அடிப்படையிலையோ அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது அரசியல் கைதிகள் உடல் உள ரீதியாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் என்றும், எனவே அவர்கள் தொடர்பில் கரிசணை கொண்டு மரண தண்டனை கைதிகளோடு அவர்களை தடுத்து வைக்காது தனியாக தடுத்து வைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனோ தாக்கத்தால் ஈரானில் சிறைக்கைதிகள் பலரும் விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் அதேபோல தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.



















