கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து கொழும்பிற்கு கடல் உணவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற கூலர் ரக வாகனம் குறித்த பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வந்துள்ளது.
இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கூலர் வாகனம் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65.9 கிராம் கசீஸ் போதைப் பொருள், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலங்கை நாணயத்தாள்கள், மற்றும் மதுபானப் போத்தல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கூலர் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த கூலர் வாகனம் அத்தியாவசிய உதவி அடிப்படையில் பாஸ் நடைமுறையூடாக கடல் உணவுகளை கொழும்பிற்கு கொண்டு சென்று வந்துள்ளமை தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்கள், மீட்கப்பட்ட போதைப்பொருள், பணம், மதுபானம் மற்றும் வாகனம் ஆகியவை இராணுவத்தினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணம் பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று இன்று நேற்று முற்றுகையிடப்பட்டது. பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொன்னாலைக்கு வெளியே இருந்து வந்தவர்களே இங்கு கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.