அமெரிக்காவில் மார்பக புற்றுநோயில் இருந்து போராடி வென்ற விதவை தாயார் ஒருவர் தனது 6 பிள்ளைகளை அனாதையாக்கிவிட்டு கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள எவரெட் பகுதியில் குடியிருந்து வந்தவர் 42 வயதான Sundee Rutter. பல ஆண்டுகள் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் இறுதியில் அதை வென்று பூரண குணமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் துவக்கத்தில் தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவர்களை நாடியுள்ளார்.
மருத்துவர்களின் சோதனையில் அது வெறும் காய்ச்சல் என்றே கூறப்பட, அவர் குடியிருப்புக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் அவரது நிலை மீண்டும் கவலைக்கிடமாக மாறியுள்ளது. மூச்சுவிடவும் கடுமையாக சிரமப்பட்ட அவர் மறுபடியும் மருத்துவமனையை நாடியுள்ளார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இப்பகுதியில் பலருக்கும் இந்த நோய் இல்லாததால், அவர் எப்படி நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது எங்களுக்கு கடினமாக இருந்தது என்கிறார் அவரது மகன் எலியா.
மட்டுமின்றி எலியாவின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யும் போது, அப்பகுதியில் வெறும் 27 பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.
சிகிச்சை பலனின்றி 9 பேர்கள் மரணமடைந்திருந்தனர். தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் கடந்துள்ளது.
எலியாவின் தாயாரை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் தொடக்கத்தில், பிள்ளைகள் ஆறு பேரும் முகக்கவசமணிந்து சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.
ஆனால் அதன் பின்னர் நோயின் தீவிரம் கருதி அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், ஜன்னலுக்கு வெளியே நின்றே எலியாவும் சகோதரர்களும் தங்களது தாயாரை காண முடிந்தது.
இதனிடையே கொரோனாவில் இருந்து Sundee Rutter தப்ப முடியாது என்பதை அறிந்த அந்த மருத்துவமனை செவிலியர்கள், அவரது 6 பிள்ளைகளிடமும் கடைசியாக பேசும் வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளனர்.
மருத்துவமனை ஜன்னலுக்கு வெளியே நின்று வால்க்கி டாக்கி மூலம் 6 பிள்ளைகளும் கடைசியாக தாயாரிடம் பேசியுள்ளனர்.
இந்த நிலையில் மார்ச் 16 ஆம் திகதி எலியாவின் தாயார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஏற்கெனவே தந்தையை இழந்த 6 பேரும் தற்போது கொரோனாவால் தாயாரையும் இழந்து அனாதையாகியுள்ளனர்.
ஆறு பேரில் மூத்தவரான 24 Tyree Ross-Rutter பெயரில் தற்போது பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதுவரை அரை மில்லியன் டொலர்கள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.