நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் விசேட வேலை திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர்கள் சந்திப்பு சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வீரியம் பெற்றுள்ள நிலையில், பொருளாதார ரீதியில் பல நாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது.
எனவே, அதனை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நிதி முதலீடு செய்ய விசேட வங்கி கணக்கொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில், விசேட வங்கி கணக்கிற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.