போலியோவை எதிர்த்து வெற்றி கண்ட இந்தியா, உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தும் மீண்டெழும் என உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் இந்திய பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கைபிரியசஸ் கூறியதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் ஒத்துழைப்பு சிறப்பானது. உலக சுகாதார அமைப்புடன் இணைந்து போலியோவை எதிர்த்து வெற்றி கண்ட நாடு இந்தியா.
தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டெழும். இதுபோன்ற இணைந்து பணியாற்றுவதன் மூலமே கொரோனாவை வெல்ல முடியும். கொரோனாவை ஒழிக்க இந்திய சுகாதார அமைச்சகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என கூறியுள்ளார்.