தமிழகத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிடம் பழகி வந்த டிக் டாக் நண்பர், அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை வாங்கிவிட்டு, திருப்பி கேட்டால் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியதால், அந்த டிக் டாக் நண்பர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆன்லை வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வரும் ஷர்மிளாவுக்கு டிக் டாக் மீது ஆசை இருந்துள்ளது.
இதனால் டிக் டாக்கில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவ்வப்போது சில ஆண்களுடன் சேர்ந்து டூயட் பாடலுக்கு ஒன்றாக நடித்து வீடியோ போட்டு வந்துள்ளார்.
அப்போது தான், ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த உமர் செரீப் என்பவர் ஷர்மிளாவுக்கு பழக்கம் ஆகியுள்ளார். டிரைவரான உமருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர் டிக் டாக்கில் தம்பிக்கண்ணு என்ற பெயரில் அக்கவுண்ட் ஒபன் செய்து டிக் டாக் போட்டு வந்துள்ளார்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கும், உமர் செரீப்பை டிக் டாக்கில் 5600 பேர் பின்பற்றி வருகின்றனர்.
அதில் ஷர்மிளாவும் ஒருவர், காதல் ரசம் சொட்ட சொட்ட உமர் வீடியோக்களை பதிவிட்டதால், இதைக் கண்ட ஷர்மிளா அவரிடம் முதலில் டிக் டாக்கில் பேசி வந்துள்ளார்.
அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் தொலைப் பேசி எண்களை மாற்றிக் கொண்டனர். அப்போது உமர் தனக்கு குழந்தைகள் மற்றும் மனைவி இருப்பதை மறைத்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக ஷர்மிளாவை நம்ப வைத்துள்ளார். உடனே ஷர்மிளாவுக்கு உமர் மீது பரிதாபம் வந்துவிடவே இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
8 மாதங்களாக கல்யாணமும் செய்து கொள்ளாமல் இருவரும் உறவில் இருந்துள்ளனர். ஷர்மிளாவிடம் 10-பவுன் தங்க நகையும் 20-ஆயிரம் ரொக்கபணமும் உமர் ஒருமுறை பெற்றுள்ளார்.
இதனிடையே கல்யாணம் செய்து கொள்ளும்படி ஷர்மிளா கேட்டு கொண்டே இருந்த நிலையில், உமர் மறுத்து வந்துள்ளார்.. ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்து வாங்கிய நகை, பணத்தை ஷர்மிளா திரும்ப கேட்டபோது, அவரை மிரட்டிய உமர், பணம், நகை பத்தி பேச்சை எடுத்தால், நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்த பேச்சு, நடவடிக்கைகள் இப்போது உமரிடம் இல்லை என்பதால் சந்தேகமடைந்த ஷர்மிளா ஒருநாள் உமரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போதுதான் ஏகப்பட்ட பெயரில் போலி அக்கவுண்ட்டுகளை உமர் வைத்திருந்தது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ந்த ஷர்மிளா கதறி அழுதுள்ளார். தன்னை போல இனி எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று ஷர்மிளா ஈரோடு நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அதன்பேரில் பொலிசார் உமர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர்.