நாள் தோறும் கொடுமைப்படுத்தும் தமது கணவன் தொடர்பில் சுவிஸ் தாயார் ஒருவர் மனம் திறந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் பலர் உளவியல் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் 29 வயதான தாரா.
தமது கணவனால் உளவியல் ரீதியான சித்திரவதையை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு அனுபவித்துள்ளார் என்பதை அவரே பகிர்ந்து கொண்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு தமக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பின்னரே தமது கணவரின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டதாக தாரா கூறுகின்றார்.
என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் அடிக்கடி என்னிடம் கூறி வருகிறார். என்னால் சரிவர சமைக்க முடியாது, என்னால் சுத்தம் செய்ய முடியாது, குழந்தைகளை நான் கவனிப்பதில்லை.
இந்தப் பேச்சுக்களால் உண்மையில் தற்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார் தாரா.
கொரோனாவால் தற்போது ஊரடங்கு என்பதால் கணவர் குடியிருப்பிலேயே இருப்பதால், நேருக்கு நேர் காணும் வாய்ப்பு அதிகம்.
இதனாலையே சூழல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தாரா தெரிவித்துள்ளார். ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, தம்மால் சரிவர தூங்க முடியவில்லை என கூறும் தாரா,
தமது கணவருக்கு உணவு சமைப்பது என்றாலே இப்போதெல்லம் பயத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை நான் சமைக்க கற்றுக்கொள்ளவில்லை என்பதே அவரின் குற்றச்சாட்டு.
ஒருமுறை அவருக்கு சரியான உணவை சமைக்கவில்லை என மொத்த உணவையும் தரையில் கொட்டினார்.
குளிக்கும்போது மட்டுமே கொஞ்சம் அமைதியை உணர்வதாக கூறும் தாரா, நான் பயப்படாத ஒரே நேரமும் அதுதான் என்கிறார்.
இதுவரை தம்மை அவர் தாக்கியதில்லை எனக் கூறும் தாரா, ஆனால் அவர் அளிக்கும் உளவியல் சித்திரவதை தாங்குவதிலும் அதிகம் என்கிறார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான தாரா கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தனது கணவரிடமிருந்து பிரிந்து செல்வது குறித்து ஆலோசித்து வருகிறார்.
ஆனால் தமது முதல் குழந்தை உறவினர்களுடன் இந்தியாவில் வாழ்ந்து வருவதால், கணவர் பழி தீர்க்கும் வகையில், தமது மகனை கடத்தவும் வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி பலமுறை அவர் இதே விவகாரம் தொடர்பில் தம்மை மிரட்டியுள்ளதாகவும், ஒருமுறை கூட வாழ்க்கையில் பார்க்க முடியாதபடி செய்வேன் என கூறியதாகவும் தாரா தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா காலம் முடிவடைந்து தமது மகன் இந்தியாவில் இருந்து சுவிஸ் திரும்பும் நாளை எதிர்பார்த்து இருப்பதாக தாரா தெரிவித்துள்ளார்.