இலங்கையில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகள் தற்போது 14 சிறப்புக் குழுக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும், தற்போதும் 92 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அந்தச் சிறப்புக் குழுக்களின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 11 பொலிஸ் குழுவினரும், ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு விசாரனைப் பிரிவின் 3 பொலிஸ் குழுவினரும் இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 197 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் 119 பேர் சி.ஐ.டியினராலும், 78 பேர் ரி.ஐ.டி.யினராலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கைதுசெய்யப்பட்ட 197 பேரில் 92 பேர் தற்போது இவ்விரு பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏனையோர் நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டும் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
இதனைவிட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் சில சம்பவங்கள் குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஊடாக விசேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் உதவிகளும் பிரதான விசாரணைகள் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன” – என்றார்.


















