ஜனநாயக நாட்டில் தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆனால், மக்களின் உயிரைக் கேள்விக்குட்படுத்தி தேர்தலுக்குச் செல்லத் தேவையில்லை. அரசமைப்பின்படி ஜூன் மாதம் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு இடம்பெற வேண்டும். ஆனால், ஜூன் 20ஆம் திகதியே தேர்தலுக்கான தினம் நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசமைப்பு ரீதியாக ஏற்பட்டுள்ள சிக்கலை அவதானிக்கும் போது ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் பழைய நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவித்துள்ள நிலையில் அதனை கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா? இல்லையா? என்பது இரண்டாம் பட்சமாகும். தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள தினம் பொருத்தமானதா என்று சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள தினம் பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு நாம் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினோம்.
காரணம் தற்போது இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், கூட்டங்கள், மத உற்சவங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேட்பாளர்கள் அதனைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மக்கள் சந்திப்புக்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்தவாறுள்ளது. எனவே, தேர்தலை நடத்துவதற்குத் பொருத்தமான சூழல் நாட்டில் உள்ளதா என்று ஆராய வேண்டும். இது தொடர்பில் ஆணைக்குழு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.


















