தமிழகத்தில் சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் சிலர் தான் கண்டுபிடித்த மருந்து மூலம் பயன் அடைந்து வருவதாக வீடியோ வெளியிட்டு வைரலான நிலையில், தற்போது அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தால், பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், அதை அழிப்பதற்கும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையில், இந்த வைரஸ் பரவல் ஆரம்பித்த போதே, கடந்த ஜனவரி மாதத்தின் கடைசியில், தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் தன்னிடம் இதற்கான மருத்து இருப்பதாக கூறினார்.
அதுமட்டுமின்றி அதற்கு ஆதாரமாக, லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றியுள்ளதாகவும், கூறி அது தொடர்பான ஓடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இதனால் சமூகவலைத்தளங்களில் பலரும் அரசை கண்டிக்க ஆரம்பித்தனர். ஒரு தமிழன் மருந்தை கண்டுபிடித்தால் இப்படி தான் இருப்பீர்களா? இதுவே அமெரிக்காகாரன் மற்ற நாட்டு காரன் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தால், அவனுக்கு கிடைத்திருக்கும் மரியாதை வேறு, தமிழன் என்பதால் தான் இப்படி என்றெல்லாம் பலர் கூறி வந்தனர்.
தொடர்ந்து அவர் சமூகவலைத்தளங்களில் தான் கண்டு பிடித்த மருந்தைப் பற்றி வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை திருத்தணிகாசலம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் திருத்தணிகாசலம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், தவறான செய்தியைப் பரப்பி மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் செயல்படுவதாக திருத்தணிகாச்சலம் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரழிவு மேலாண்மைச் சட்டம், உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் உள்பட 5 பிரிவுகளின்கீழ் திருத்தணிகாச்சலம் மீது வழக்குப் பதிவுசெய்த பொலிசார் அவரை கைது செய்தனர்.
இதன் மூலம், திருத்தணிகாசலம் போலி சித்த மருத்துவர் என்பது தெரியவந்ததால், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பொலிசார் ராயபுரத்தில் உள்ள எழும்பூர் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்கு பிறகு வருகிற 20-ஆம் திகதி வரை திருத்தணிகாசலத்தை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை பொலிசார் சைதாபேட்டை சிறையில் அடைத்தனர்.
மேலும் திருத்தணிகாசலம் குறித்து சித்த மருத்துவர்கள் சிலர் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு முன் அரும்பாக்கம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். அப்போது அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் திருத்தணிகாசலம் கிளினிக்கில் வேலை பார்த்தார்.
இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர், அந்த மாணவியை திருத்தணிகாசலம் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.
பொலிசார் தன்னை தேடி வருகின்றனர் என்பதை அறிந்தவுடன், தேனி பெரியகுளம் பகுதியில் இவர் பதுங்கியுள்ளார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவரை அங்கு கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இவர் மீது, 188 IPC r/w sec. 3 of Epidemic Diseases Act, 505(1)(b) , 153A IhPC, sec. 54 of Disaster Management Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.