கொரோனா சீன ஆய்வகத்தில் தோன்றியது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜேர்மனி உளவுத்துறை அறிக்கை சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
மேலும் இந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்க நோயைக் கட்டுப்படுத்தத் தவறியதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என்று டெர் ஸ்பீகல் பத்திரிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஞாயிற்றுக்கிழமை, சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளிவந்ததற்கு குறிப்பிடத்தக்க அளவு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார், ஆனால் அது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்ற அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் முடிவை மறுக்கவில்லை.
ஜேர்மனியின் பிஎன்டி உளவு நிறுவனம், அமெரிக்கா தலைமையிலான ‘Five Eyes’ உளவுத்துறை கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் குற்றச்சாட்டை ஆதரிப்பதற்கான ஆதாரங்களைக் கேட்டுள்ளதாக ஸ்பீகல் பத்திரிகை கூறியுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய கூட்டணியின் உறுப்பினர்கள் யாரும் பாம்பியோவின் கூற்றை ஆதரிக்க விரும்பவில்லை என்று அது கூறியது.
ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சர் அன்னெக்ரெட் கிராம்ப்-கரன்பவுருக்கு அனுப்பப்பட்ட உளவுத்துறை அறிக்கை, அமெரிக்க குற்றச்சாட்டுகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்றே திட்டமிட்ட முயற்சி என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இதுதொடர்பில் ஜேர்மனி அரசாங்க செய்தித் தொடர்பாளர் தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.