நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக குற்றம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கோவை பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் கோவையிலும் ஷாகின் பாக் போராட்டம் பிப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்ரவரி 22ம் திகதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த ஷாகின்பாக் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது சீமான் அரசுக்கு எதிராகவும், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும்வகையில் பேசியதாகவும் பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதாகவும் அவர் மீது தேச துரோக வழக்கு கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.



















