கோடி ரூபாய் கொடுத்தாலும் என் அக்காவுக்கு ஈடாகுமா என விழுப்புரம் மாவட்டத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்ட ஜெயஸ்ரீயின் தங்கை கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை காலனியை சேர்ந்தவர் ஜெயபால்.
இவரது மனைவி ராஜீ. இவர்களுக்கு இரு மகள்கள். மூத்த மகள் ஜெயஸ்ரீ 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜெயபாலுக்கும் அதிமுகவில் நிர்வாகிகளாக இருந்த முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இருவரும் அதிமுகவில் முக்கிய புள்ளிகளாக இருந்த போதிலும் ஜெயபால் தங்களை எதிர்த்து பேசுகிறாரே என்ற ஆத்திரத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் ஜெயபாலை அடித்துள்ளனர்.
இதனால் ஜெயபால் அவர்கள் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.
அப்போது அவரது பெட்டிக் கடையில் தனியாக இருந்த ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை முருகனும் கலிய பெருமாளும் அவரது வீட்டுக்குள்ளே தூக்கிக் கொண்டு போய் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி இருவர் குறித்தும் மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கொலை வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சிறுமியின் மரண வாக்குமூல வீடியோ தமிழகம் முழுவதும் வைரலானது. இதை பார்ப்போர் மனம் பதற வைத்தது. இந்த நிலையில் ஜெயஸ்ரீயின் இறப்பு குறித்து அவரது தங்கை கதறி அழுதவாறே பேசியது கண்ணீரை வரவழைக்கிறது.
இதுகுறித்து ஜெயஸ்ரீயின் தங்கை கூறுகையில் 8 ஆண்டுகளுக்கு முன்னாடியே முருகன், கலிய பெருமாள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு என் அக்காள் இறந்திருக்கமாட்டாள். கோடி ரூபாய் கொடுத்தாலும் என் அக்காவுக்கு அது ஈடாகாது. என் அக்கா என் கூடவே இருக்கும் என அழுதுக் கொண்டே கூறியது காண்போரை கலங்கடிக்கிறது.