இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில ரயில்நிலைய பணிமனையில் ரயில்களை தூய்மைப்படுத்தும் பணியின் போது, புலம்பெயர் தொழிலாளியின் அழுகிய உடல் கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
உயிரிழந்த நபர் 38 வயதான மோகன் லால் ஷர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும்,
மே 23 ஆம் திகதி ஜான்ஸியில் இருந்து கோரக்பூர் சென்ற ரயிலில் பயணித்தவர் என்பதும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தபோது, அவர் மும்பையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும், பொது முடக்கத்தால் வேலையை இழந்து வீட்டுக்குத் திரும்புவதாகக் கூறியிருந்ததும் தெரிய வந்துள்ளது.
முதல்கட்ட விசாரணையில், ஷர்மா, மும்பையில் இருந்து பேருந்து மூலம் மே 23 ஆம் திகதி மாலை ஜான்ஸி வந்தடைந்தார். ஜான்ஸியில் இருந்து கோரப்பூர் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் கோரக்பூரில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு ஜான்ஸிக்கு மே 27 ஆம் திகதி திரும்பியது.
அங்கு ரயில் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிக்காக திறக்கப்பட்ட போது, கழிவறையில் ஷர்மாவின் அழுகிய உடலை துப்புரவுப் பணியாளர்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அவரது சட்டைப் பையில் ஜான்ஸி – கோரக்பூர் செல்ல ரயில் டிக்கெட்டும் இருந்துள்ளது. அவர் வைத்திருந்த பையில் ரூ.28 ஆயிரம் ரொக்கம், சில புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களும் இருந்துள்ளன.
இறந்து சுமார் நான்கு நாள்களுக்குப் பிறகு ஷர்மாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால், உடற்கூறு ஆய்வுக்குப் பின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.