மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி ஊவ தென்னே சுமண தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
T56 துப்பாக்கிகள்- 2, கைக்குண்டுகள்- 50, துப்பாக்கி ரவைகள்-210 உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள் மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூபணமானதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (01) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.
2010 ஜனவரி 02ஆம் திகதி- ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில்- பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, ஸ்ரீ போதிராஜராம விகாரையை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியிருந்தனர்.
சுமார் 10 வருடமாக நீடித்த வழக்கில் நேற்று தீர்ப்களிக்கப்பட்டது.
இவ்வழக்கில், ஊவ தென்னே தேரருடன் குற்றம்சாட்டப்பட்ட, அவ்விகாரையைச் சேர்ந்த மாவெல சுபோத தேரர், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படும் பீ.ராஜபாலன், கே.தமிழ்செல்வம், சந்தானம் சுப்ரமணியம் ஆகியோரை நிரபராதிகள் என குறிப்பிட்டு, ஜூன் 24, 2018 இல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.