முல்லைத்தீவில் தொடர்சியாக இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியளாலர்கள் கடத்தல் காரர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர்.
அந்த தாக்குதல் சம்பவத்தை மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டித்துள்ளதோடு, தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் நேற்றைய தினம் சட்ட விரோத குழு ஒன்றினால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
சட்ட விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் தமது கடமையை மோற்கொண்ட இரு ஊடகவியலாளர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அச்சுறுத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நிலை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி கேள்விக்குறியாகவே உள்ளது.
மக்களின் நலனுக்காக சொற்ப வேதனத்துடன் துணிச்சலுடன் சேவை செய்கின்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். அந்த வகையிலே சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீதும் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
தொடர்சியாக மரக்கடத்தல் மற்றும் மண் கடத்தல் நடவடிக்கைகயில் ஈடுபடும் கொள்ளைக்காரர்கள் ஊடகவியளாலர்கள் மீது தாக்குதல் நடாத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு தொடர்சியாக இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. இச்சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் மாகாண ரீதியில் உள்ள ஊடகவியலாளர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி வரும் என எச்சரிக்கின்றோம்.
எனவே தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் ஊடக அமைச்சர் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.