போலந்து நாட்டின் அதிபர் ஆண்ட்ரேஜ் டூடாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பொது மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், முதன்மை பணியாளர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. ஏற்கனவே இந்த வைரஸுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் பொல்செனரோ உள்ளிட்ட தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடாவும் இணைந்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அதிபரின் செய்தித் தொடர்பாளர் பிளேஸ் ஸ்பைச்சால்ஸ்கி, அதிபர் ஆண்ட்ரேஜ் டூடொவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நன்றாக இருக்கிறார் தனைமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் குறைவான பாதிப்புகளை சந்தித்து வந்த போலந்து கடந்த ஒரு மாதமாக அதிக வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. அங்கு இதுவரை கொரோனா வைர்ஸ் தொற்றால் 2,42,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.