பாரிஸ் நகரின் தெருவொன்றில் வாளுடன் மர்ம நபரின் நடமாட்டம் தெரிய வந்துள்ள நிலையில், தற்போது பொலிசார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களை வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ள பொலிசார், பாதுகாப்பாக இருக்கவும் கோரியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 10.45 மணியளவில் ஒரு நபர் மெட்ரோ நிலையத்திற்குள் ஆயுதம் வைத்திருப்பதைப் பார்த்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கருதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பிரெஞ்சு காவல்துறை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, மேலும் அந்த மர்ம நபரின் நோக்கம் தொடர்பில் இதுவரை எந்த அறிகுறியும் பொலிசார் தரப்பில் கணிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
சமீபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் பிரான்ஸ் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த வாரம் நைஸில் ஒரு தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், சனிக்கிழமையன்று ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் லியோனில் உள்ள தனது தேவாலயத்திற்கு வெளியே துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்த நிலையில், நாடு பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும், இதனால் தேவாலயங்கள் மற்றும் தொழுகைகூடங்கள், பாடசாலைகளில் பாதுகாப்பு எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ஜனாதிபதி மேக்ரோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.