புரேவி புயலினால் ஏற்பட்ட கடும் மழை, பலத்த காற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இருபாலை தெற்கு, இருபாலை கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தபுரம், ஞான வைரவர் கோயிலடி, வசந்தபுரம், மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளது.
புதிய செம்மணிவீதி, கட்டப்பிராய் கலைமணிவீதி, சின்னக்கோவில்வீதி மற்றும் பல வீதிகள், ஒழுங்கைகள் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றார்கள்.
பயன்தரு மரங்கள் பலவும் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீதிப் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அத்துடன் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் சிறுவர்கள் எவரையும் வெளியான பிரதேசங்களுக்கு நடமாட அனுமதிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிரதேசசெயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் பாதிப்பு விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், வெள்ளங்களை வெளியேற்றும் வகையில் துரிசுகளை திறப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் தெரிவித்தார்.




















