கொரோனாவினால் காவு கொள்ளப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர் குழு தமது விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நிபுணர் குழு தமது அறிக்கையை விரைவில் சமர்பிக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கேட்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரதம அதிகாரி யோசித்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் படி தற்போது கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் தகனம் தொடர்பிலேயே தனது பரிந்துரையை வழங்கியிருக்கிறது.
இவ்விடயத்தில் எந்தவித அரசியல தலையீடு இல்லை என யோசித ராஜபக்ச குறிப்பிட்டிருக்கிறார். இந்தநிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையை துரிதமாக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிபுணர்களை கேட்டிருப்பதாக யோசித ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.
சமயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அனைத்து மதங்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்ற வகையிலேயே பிரதமரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதேவேளை சுகாதார அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த விடயத்திற்கு தீர்வொன்றை காண்பதற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தகாராகி வருவதாகவும் யோசித்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவினால் காவு கொள்ளப்படும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான உரிமை வேண்டும் எனக்கோரி முஸ்லிம்கள் மத்தியில் இருந்து தற்போது கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்ற நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதேவேளை கொரோனாவினால் காவு கொள்ளப்படுவோரின் சடலங்களை அடக்கம் செய்யும்போது அதிலிருந்து நீர் வழியாக கொரோனா வைரஸ் ஏனைய இடங்களுக்கு பரவுவது தொடர்பாக ஆதாரங்கள் இருப்பின் அதனை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்தும் நிபுணர் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இவ்விடயம் தொடர்பில் முழுமையான அறிக்கை இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


















