இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் கடத்தி வரப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேலான தங்கக்கட்டிகளை மத்திய புலனாய்வு சுங்கத்துறை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தமிழகத்திற்கு நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வருவதாக, மத்திய புலனாய்வு சுங்கத்துறை பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நள்ளிரவு முதலே மண்டபம், ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர், மத்திய புலனாய்வு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன் படி, நேற்று அதிகாலை மணாலி தீவு அருகே ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக ஒரு நாட்டுப்படகை கவனித்த அதிகாரிகள், அதனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, படகில் இலங்கையில் இருந்து கடத்தி வந்த 9.7 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. படகில் இருந்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த முகமது ராசிக், பைஸ் அகமது, முகமது பரூக், ஜெயினுல் பயாஸ் கான், ஜசிம் அகமது ஆகியோரை கைது செய்தனர்.
இதன் மதிப்பு 4.5 கோடி ரூபாய் எனவும், 5 பேரையும் மண்டபம் முகாமில் உள்ள இந்திய கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.