பிரித்தானியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்களை பிரித்தானியா அரசு குறைத்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு விட்டு நாடு தொற்று நோயாக பரவி வருவதால், அந்த நோயிடம் இருந்து தப்பிப்பதற்கு ஒவ்வொரு நாடுகளும் கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதன் படி பிரித்தானியா அரசு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் யாராக இருந்தாலும், குறைந்த பட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், மீறினால் கடும் அபராதம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
அதன் பின் வைரஸின் பரவல் குறைய, குறைய பிரித்தானிய அரசு தன்னுடைய பயணக்கட்டுப்பாட்டில், சில தளர்வுகளை அறிவித்தது
இந்நிலையில், தற்போது பிரித்தானிய அரசு, பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14-ல் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாமை பிரிட்டன் அரசு தொடங்கியுள்ளது. பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக 95 சதவீதம் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்ததையடுத்து, பிரித்தானிய சுகாதாரத்துறை, மருந்து மற்றும் சுகாதாரத்துறை பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த அரசுக்கு அனுமதி வழங்கியது.
இதற்காக பிரித்தானியாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.