வவுனியாவில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமூகத்திலிருந்தும் இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.
அந்தவகையில் புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலையைச் சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.
நேற்றையதினம் பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதன்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இவற்றைவிட வவுனியா கற்குழியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி மற்றும் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவற்றைவிடப் பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள தெற்கினை சேர்ந்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்திலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை இடைநிறுத்துவதாக வவுனியா தெற்கு வலயகல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலம், தமிழ் மத்திய மகாவித்தியாலம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலம், காமினி மகாவித்தியாலம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
இதேவேளை கற்குழி மற்றும் திருநாவற்குளம் பகுதிகளில் தொற்று உறுதியானவர்களின் வீடுகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



















