சுமந்திரன் சிலரை எல்லா காலத்திலும் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியருக்கு முட்டாளாக்க பார்ப்பது குருத்துரோகம். நாங்கள் கூறுவது பொய் என சுமந்திரன் சொல்லியிருந்தார். அவர் சம்மதித்தால், அவர் அனுப்பிய ஆவணத்தின் மொழிபெயர்ப்பை வெளியிட தயாராக இருக்கிறேன். அது வெளியானால், யார் பொய் சொன்னது என தெரிய வரும். இந்த விடயத்தில் சுமந்திரன் அலாப்புகிறார் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.
இன்று (21) யாழில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவரது ஆவணமொன்று எமக்கு பரிசீலிக்க தரப்பட்டது. அதன் பின்னர், அதை ஏற்க முடியாதென எமது கருத்தை தெரிவித்தேன். சுமந்திரன் சிலரை எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியும், முட்டாளாக்கலாம். பலரை சில காலம் முட்டாளாக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக்காலத்திலும் முட்டாளாக்க முடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியருக்கு முட்டாளாக்க பார்ப்பது குருத்துரோகம்.
நானும், கஜேந்திரகுமாரும் பொய்கூறுவதாக அவர் கூறுகிறார். அவர் கூறுவது சரியா, அல்லது நானும், கஜேந்திரகுமாரும் கூறுவது சரியா என்பதை, அவர் கொடுத்த கடிதத்தை மொழிபெயர்த்தால் தெரிந்து கொள்ளலாம். அதை மொழிபெயர்க்க அவர் அனுமதித்தால், அந்த கடிதத்தை மொழிபெயர்க்கலாம். அவரது அனுமதியின்றி அதை செய்ய நான் விரும்பவில்லைஃ
ஆனால், எங்களுடைய பதிலை மக்களிற்கு நாம் கூறினோம். ஏனெனில் இவ்வாறான விடயங்கள் நடக்கிறது என்பதை மக்களிற்கு எடுத்துக் கூறுவதற்காக.
அதாவது தமது சிபாரிசுகளென அவர் கூறியிருப்பது, இலங்கை உட்பட ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் மனித உரிமைகள் பேரவையிலுள்ள நாடுகளின் சம்மதத்துடன் முன்னர் இயற்றியதை போன்ற கூட்டத் தீர்மானத்தை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் இயற்ற வேண்டுமென கூறியிருக்கிறார்.
முன்னர் 3 முறை காலக்கெடு வழங்கியதை போல மேலுமொரு முறை காலக்கெடு வழங்க வேண்டுமென்பதுதான் அந்த ஆவணத்தின் உள்ளடக்கம். அதில் எந்த மயக்கமுமில்லை.
அவர் தனது சிபாரிசுகளிற்கு அப்பால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்களினால் முன்னர் செய்த காரியங்களை அவர் குறிப்பிடுகிறார். சிரியா, மியன்மார் பற்றியும் அதில் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த நாடுகள் சம்பந்தமாக செய்தது போல, இலங்கை சம்பந்தமாகவும் பொறிமுறைகளை இயற்றுங்கள் என அவர் எங்கும் கூறவில்லை. முன்னர் எடுத்த தீர்மானங்களை போல தீர்மானங்களை எடுங்கள் என தனது சிபாரிசை சமர்ப்பித்து விட்டு, சில நாடுகளில் இப்படியும் நடந்தது என வேறொரு விடயமாக குறிப்பிட்டார். ஆனால், இவ்வாறு எங்களிற்கு செய்யப்பட வேண்டுமென எங்கும் கூறவில்லைஃ
இதைத்தான் கிராமங்களில் அளாப்புவது என்பார்கள். சுமந்திரன் இந்த விடயத்தில் அளாப்புகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
எமக்கு இந்த கடிதம் பற்றிய எமது அபிப்பிராயங்கள் வெளியாக முன்னரே ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டு விட்டதாக இப்பொழுது அறிந்தேன். எமக்கு பரிசீலனைக்கு தந்த உடனேயே, எமது அப்பிராயத்திற்கு முன்னதாக கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாக அறிகிறேன். அப்படி நடந்தால், அது வருந்தத்தக்கது.
அடுத்துநாங்கள் என்னசெய்யவேண்டும் என்றுகேட்கின்றீர்கள்.
பொதுவாக இரண்டுவிடயங்களைப் பலர் அடையாளம் கண்டுள்ளார்கள்.
ஒன்று ஐ.சீ.சி என்னும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது இலங்கைக்கென நியமிக்கப்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் முன் இலங்கையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைச் சம்பந்தப்பட்ட ஒரு அங்கத்துவ நாட்டின் ஊடாகச் செய்ய வேண்டும். அடுத்தது சர்வதேச சுதந்திர விசாரணைப் பொறிமுறையொன்றை நிறுவி அதைக் கொண்டு இலங்கையில் நடந்த மிக ஆபத்தான சர்வதேசக் குற்றங்களையும் சர்வதேசச் சட்டமீறல்களையும் பற்றிய சாட்சியங்களைச் சேகரித்து அவற்றை ஒன்றுபடுத்தி, பாதுகாத்து அவற்றை ஆய்வுசெய்யவும் அவை தொடர்பாக உரிய கோவைகளைத் தயாரித்து சர்வதேசச் சட்டமுறைமைக்கேற்றவாறு நியமிக்கப்படும் நீதிமன்றங்களில் அல்லது தீர்ப்பாயங்களில் நடைபெறும் குற்றவியல் நடவடிக்கைகளில் அக்கோவைகளைச் சமர்ப்பித்து நீதியும் சுதந்திரமானதுமான விசாரணைகளை விரைவாக நடத்த அனுசரணை வழங்கும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் சமாந்திரமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டுபோவது பற்றியும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
அத்துடன் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையூடாக விசேடஆய்வாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஆய்வாளர் ஒருவரை நியமிக்கக் கோரலாம்.
அதுமட்டுமல்ல. ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்பாடுகளை ஆராயுமாறும் கோரலாம். இவை பற்றி எல்லாம் ஆராய வெளிநாட்டு சர்வதேசச் சட்டவல்லுநர்களுடன் நான் தொடர்பில் இருக்கின்றேன். மையநாடுகளுடன் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. தமிழ் தரப்பார் யாவரும் சேர்ந்து ஒரு கோரிக்கை விடுத்தால் நாம் அதன்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜெனிவாவில் இருக்கும் பிரித்தானியத் தூதுவர் கூறியுள்ளார். ஆகவே நாங்கள் மேலும் காலஅவகாசம் கொடுக்காது, Roll Over என்று முன்னைய கூட்டத் தீர்மானத்தையே பிறிதொரு முறை கொண்டு வராமல், இலங்கைக்கு எதிராக செய்ய வேண்டியவற்றை மைய நாடுகள் துணைகொண்டு செய்ய வேண்டும். அதற்கு சகல தமிழ்த் தரப்பாரும் ஆதரவு வழங்க முன்வர வேண்டும். எமதுஒற்றுமையே இந்தத் தருணத்தில் எமக்குப் பலமாகும் என்றார்.



















