மட்டக்களப்பு நகருக்குள் நேற்று இரவு தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு பறவைகளை சுடும் துப்பாக்கிமூலம் குறித்த தாதிய உத்தியோகத்தர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இரண்டுமுறை சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த தாதிய உத்தியோகத்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் பூம்புகார், கண்ணகியம்மன் வீதியை சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமை தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் நடராஜா ராதா என்பவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் பொறியியலாளர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



















