அரசாங்கத்திற்கு சொந்தமான நிலப்பரப்பை நில சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரிகள் வெளியாட்களுக்கு ஒப்படைத்ததாக கூறி நல்லதண்ணி ரிகாடன் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்று (23) மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் ரிகாடன் பகுதியிலேயே இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து அதன்பின் போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
நல்லதண்ணி ரிகாடன் பகுதியில் உள்ள நிலப்பரப்பில் இரண்டரை ஏக்கர் கொண்ட நிலத்தினை கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நில சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரிகள் வழங்கியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இருப்பதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
பல வருட காலங்களாக இப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கு ஒரு சிறிய துண்டு நிலம் கூட வழங்கவில்லை. ஆனால் வெளியாட்களுக்கு இந்த நிலப்பரப்பை கொடுத்துள்ளதாகவும், இதனால் தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் போராட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் நில சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரிகள் கேட்ட போது,
நாங்கள் குறித்த இடத்தினை மேற்படி நபருக்கு வழங்கவில்லை. ஆவணங்களும் தயாரித்துக்கொடுக்கவில்லை. இது எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



















