மின்னஞ்சல் ஊடாக விமான நிலைய பணிக்குழுவினருக்காக கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட கூறும் தம்மிக்கவின் பாணியை கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க மன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது பேசிய அவர்,
விமான நிலைய பணிக்குழாமினருக்காக கொவிட் 19 தடுப்பதாக கூறப்படும் தம்மிக்க பாணியை கொள்வனவு செய்யுமாறு அறிவித்து மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாறப்பட்டுள்ளதாக பேசியிருந்தார்.
இது தொடர்பில் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் வழிநடத்தல் பணிப்பாளர் சேஹான் சுமனசேகரவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்குப் பதில் வழங்கிய அவர், இவ்வாறான எந்தவொரு தீர்மானமும் விமான நிலையம் அல்லது விமான சேவைகள் நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கொரோனாவை தடுப்பதாக கூறப்படும் கேகாலை தம்மிக்க பண்டாரவால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பாணி தொடர்பிலான ஆய்வு கூட பரிசோதனை ஆரம்பித்து நேற்றுடன் 10 நாட்கள் நிறைவடைகின்றன.
எனினும் அந்த பாணியை அருந்தியவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை தொடர்பில் குறித்த ஊடகம், சுதேச சிகிச்சை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவிடம் கருத்துக் கேட்டது,
அது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர், ஆய்வு கூட பரிசோதனையில் உறுதிப்படுத்துவதற்கு முன்னர் குறித்த பாணியை கொரோனா தடுப்பு ஒளடதமாக பயன்படுத்த முடியும் என தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என்று குறிப்பிட்டார்.