ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சத்தினை நோக்கிய நாடு என்ற கருப்பொருளில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச காணிகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இந்நிலையில் அவர்களில் 70,769 பேர் அதற்கான தகுதியை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையிலேயே காணிகளை பகிர்ந்து அளிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களின் தொழில் முயற்சிக்கான திட்ட முன்மொழிவுகளும் கோரப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் காணி பாவனை திட்டமிடல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் கிஷாந்தி கலந்து கொண்டு காணி பெறுவோருக்கான நேர்முக தேர்வுக்கான திகதியினை விரைவாக பிரதேச செயலாளர்கள் முன் வைக்கின்ற பட்சத்தில் காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் விரைவாக எதிர்காலத்தில் நடாத்தப்படும் என குறிப்பிட்டனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 79,590 நபர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 70,769 விண்ணப்பதாரிகள் மாத்திரமே காணி பெறுவதற்கு தகுதி உடையவர்களாக உள்ளனர்.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 8,438 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 12,860 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப்பிரிவில் 4,652 பேரும், மண்முனை பற்று பிரதேச செயலகப்பிரிவில் 2,714 பேரும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4,239 பேரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4,007 பேரும், கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 3,044 பேரும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 3,516 பேரும், மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2,168 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 2,349 பேரும், போரதீவுபற்று பிரதேச செயலகப்பிரிவில் 4,631பேரும், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் 6,585 பேரு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 3,090 பேர்களுடைய விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் பிரதேச செயலாளர்கள் காணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.