வவுனியா – செட்டகுளம் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செட்டிகுளம் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் செட்டிகுளம் பிரதேச செயலாளர் தமக்கு சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளதாகவும், அவரை இடமாற்றம் செய்யாமல் மீண்டும் இதே பகுதிக்கு நியமிக்குமாறும் கோரியுள்ளனர்.
அத்துடன் ஏன் இந்த அவசர இடமாற்றம், நிறுத்து நிறுத்து எம்மவரை மாற்றுவதை நிறுத்து, யாருக்கு இலாபமீட்ட இந்த இடமாற்றம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்ததுடன், ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கும் அரச அதிபருக்கும், மகஜர்களையும் கையளித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கு.திலீபன் விஜயம் செய்திருந்ததுடன் குறித்த கோரிக்கைக்கான தீர்வினை வழங்குவதாக உறுதிமொழியும் வழங்கியுள்ளார்.
அண்மையில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன் வேலணை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் வேலணை பிரதேச செயலாளர் செட்டிகுளத்திற்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















