தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டுதன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆயுத போராட்டங்களை மாத்திரம் தேசிய பாதுகாப்பு க்குள் உள்ளடக்க முடியாது.தேசிய பாதுகாப்புக்குள் சுகாதாரமும் உள்ளடங்குகிறது.
அந்ந வகையில் மக்களின் பொது சுகாதாரம் அச்சுறுத்தல் தன்மையில் காணப்படுகிறது. இதற்கு தீர்வு காண அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுத்தன்மையில் இருந்து முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலடைந்த காலத்தில் இருந்து குறிப்பிட்டோம். எமது கருத்துக்கு அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தற்போது காலதாமதத்தை ஏற்படுத்தி செயற்படுத்துகிறது.
கொவிட்-19 தடுப்பூசி பெறல், தடுப்பூசிகளை விநியோகித்தல் ஆகியவற்றின் பொறுப்பினை சுகாதார வைத்திய நிபுணர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்விடயத்தில் பிற துறைசார் நிபுணர்கள் தலையிடுவது ஏற்புடையதல்ல.ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.
மலேரியா, போலியோ போன்ற நோய்களை முற்றாக ஒழிக்க அரசாங்கம் உலக சுகாதார தாபனத்துடன் இணைந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.
கொவிட்-19- தடுப்பூசியை பெற்றுக் கொள்ள செய்துக் கொள்ளப்படும் ஒப்பந்தங்கள், எக்காலப்பகுதியில் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மை தன்மையுடன்செயற்பட வேண்டும். தடுப்பூசினை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் பொருளாதார போட்டித்ன்மை ஏற்படும் .
கொவிட்-19 வைரஸ் உலகிற்கு முதலும் இல்லை இறுதியுமில்லை, எதிர்காலத்தில் வைரஸ் போர் ஏற்படும் அதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக வேண்டும்.
வைரஸ் கண்டறிதல் தொடர்பிலான மனித வளம் குறைவாக காணப்படுகிறது.வைரஸ் கண்டறிதல் மத்திய நிலையம்,வைரஸ் கட்டுப்பாடு மத்திய நிலையம் நாட்டில் கிடையாது.அபிவிருத்தியடையும் நாடுகளில் தற்போது அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.