சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம், என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அறை கூவல் விடுத்துள்ளார்.
நேற்று மாலை திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நாளை அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ள மாபெரும் அமைதி பேரணிக்கு எங்களுடைய மக்கள் பூரணமான ஆதரவினை வழங்க வேண்டும். ஏனென்றால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களுடைய இருநூறுக்கு மேற்பட்ட ஆலயங்கள் அதே போன்று எங்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் வனபரிபாலன இலாகா, தொல்பொருள் திணைக்களத்தினால் கபழீகரம் செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து கொண்டு வருகின்றது.
இவ்வாறு எம் தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக எமது பூரணமான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பும் வழங்கவுள்ளது . இதற்கு அம்பாறை மாவட்ட தமிழர்களும் ஆதரவினை வழங்க வேண்டும். குறிப்பாக போர் முடிந்த கையோடு கிட்டத்தட்ட 12 வருடங்களாக திணிக்கப்பட்ட அடக்குமுறையை சந்தித்த எமது தமிழ் மக்கள் இப்போது மோசமான சூழலை எதிர்கொண்டுள்ளோம்.
குறிப்பாக தமிழர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுவதும் , வாழ்விடங்கள் கபழீகரம் செய்யப்படும் செயற்பாடு அதி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பழம்பெரும் ஆலயங்கள், பௌத்த தேவாலயங்களாக மாற்றப்படுவதும் அங்கு அரசபடையினர் குவிக்கப்படுவதும் அங்குள்ள எமது மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சூழலில் தான் சிவில் அமைப்புக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் எமது மக்கள் ஆதரவினை வழங்குவதன் மூலம் எமது ஒருமித்த குரலாக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.