மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கோவிட் தொற்றின் முதல் நிலை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 2 மாணவர்கள் பாடசாலையில் தனிப்பட்ட ஒருபரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்குத் தோற்றி வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதை அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் மேலும் 09 கோவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 கோவிட் தொற்றாளர்கள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3 கோவிட் தொற்றாளர்கள் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையத்தின் குடும்பத்தினருடன் தொடர்பு பட்டவர்களாகவும், மேலும் ஒருவர் இன்னும் ஓர் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றின் பணியாளராகவும், 5 ஆவது நபர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவராக உள்ளார்.
குறித்த நபருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பு பட்டு இருந்தமையினால் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
மேலும் நேற்றையதினம் 4 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கு பகுதியில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மொத்தமான 271 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் மாத்திரம் 254 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மன்னார் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பரீட்சைக்குத் தோற்றுகின்ற 2 மாணவர்கள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் முதல் நிலை தொற்றாளர்களாக உள்ள நிலையில் அவர்கள் பாடசாலையில் தனிப்பட்ட ஒரு பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைச் சுகாதார பிரிவினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த ஒரு மாணவன் விசேட ஒழுங்குகளுடன் பரீட்சைக்குத் தோற்றுகின்றார்.
மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள் எவரும் தொற்றுடன் காணப்பட்டால் அவர்கள் பரீட்சை எழுதுவதற்கு விடத்தல் தீவு வைத்தியசாலை பரீட்சை மண்டபமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வாரம் சிறுமி ஒருவர் பேசாலை பகுதியில் டெங்கு காய்ச்சலினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இருந்த வீட்டுப் பிரதேசம் சூழவும் புகையூட்டல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.