ஐரோப்பா கண்டத்தில் மட்டும் கடந்த வாரத்தில், 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது முன்பு இருந்ததை விட 9 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனா முழுவதும் பரவி, அதன் பின் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி ஏராளமான மக்களின் உயிரை எடுத்து வருகிறது.
குறிப்பாக இந்த வைரஸ் ஐரோப்பாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் பாதிப்பு குறைந்தாலும், பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது.
இதனால் தளர்த்தப்பட்ட ஊரடங்குகள், இப்போது மீண்டும் கடுமையாக்கப்பட்டு வருகிறது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 27 ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.
இதில் டென் மார்க், இத்தாலி, அயர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வைரசின் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது.
இத்தாலியில் மிலன் புறநகரில் உள்ள போல்லெட் பகுதியில் நர்சரி பள்ளிகளில் 45 குழந்தைகள் மற்றும் 14 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் கடந்த வாரத்தில் 10 லட்சம் பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முன்பிருந்த வாரத்தை விட 9 சதவீதம் அதிகம் ஆகும்.
ஐரோப்பியா கண்டத்தில் நேற்று 1.53 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, பிரான்சில் தலா 23 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் மற்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் கூறுகையில், உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது, பாதிப்பு அதிகமாவது மட்டுமல்ல, பாதுகாப்பையும், கட்டுப்படுத்துவதையும் சரியாக செய்யாத சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார்.