கொழும்பு – கொஹூவலை பகுதியில் காரொன்றில் இருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் டி.என்.ஏ. முடிவு வெளியாகியுள்ளது.
அதன்படி உயிரிழந்தவர் பாதிய மாவத்தையைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகருடையது என மரபணு சோதனைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் மற்றும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் வர்த்தகரின் தாய், தந்தையிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ, மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சடலம் மீது பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் உயிரிழந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் உறுதிசெய்யப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த 10 ஆம் திகதி கொஹூவலை – ஆசிரிமாவத்தை பகுதியில் தீக்கிரையான நிலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனைக்குட்படுத்திய போது, அதிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சடலம் களுபோவிலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகரொருவருடையது என சந்தேகம் வெளியிட்டனர்.
அதன் பின்னர் அதனை உறுதிபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனைகளிலேயே உயிரிழந்தவர் தொடர்பான விபரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.