யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பாடசாலைகளை உடைத்து 40 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இணைந்து கடந்த நான்கு மாதங்களில் யாழ்ப்பாணம், மானிப்பாய், காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளை இரவு வேளைகளில் உடைத்து பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களைத் திருடியுள்ளதாக தெரியவருகிறது.
திருடிய பொருட்களில் ஒரு பகுதியை சந்தேகநபர்கள் விற்பனை செய்தும் உள்ளனர். செம்மணியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி மகளிர் கல்லூரி, புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம், மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயம், கைதடி கலைவாணி வித்தியாலயம், கட்டுடை சைவ வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம், கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க பாடசாலை மற்றும் பூநகரி மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளிலேயே சந்தேகநபர்களால் பொருட்கள் திருட்டப்பட்டுள்ளன.
இந்தப் பாடசாலைகளில் இரண்டில் இரு தடவைகள் திருட்டுப் போயுள்ளன.
ஒளி எறிவு படக் காட்டமைவுகள், கணினிகள், அதிதிறன் பலகைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட 40 இலட்சம் பெறுமதியான பொருள்கள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் திருட்டுக்குப் பயன்படுத்தியதாக முழங்காவிலைச் சேர்ந்தவரிடமிருந்து பட்டா படி வாகனம் ஒன்றும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரிடமிருந்து ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாடசாலை உபகரணங்களை அடையாளம் காண்பிக்க அதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உஜித் எம்.பி. லியனகேயின் கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.பிரதீப் தலைமையிலான அணியினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.