இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் வீட்டின் இடிபாடுகளுக்குள் சுமார் 7 மணி நேரம் சிக்கியிருந்த சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே காசா பகுதியை நோக்கி, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளதால், காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
மேற்கு கரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வரும் நிலையில் மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வரும். இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள பாலத்தீன மக்கள் தொழுகை நடத்தும் அல் அக்சா மசுதிக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காசாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் கடந்த சில நாட்களாக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் குழந்தைகள் 42 பேர் உட்பட இதுவரை 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 6 வயது சிறுமி ஒருவர் பல மணி நேரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை மட்டும், உயிருடன் இருந்தார். அப்போது அவர் தன் மகளை காப்பாற்றுவதற்கு போராடினார். உடன் இருந்த மீட்பு படையினரும், அந்த இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த இந்த சிறுமியை வெளியில் கொண்டு வர போராடினர். அதன்பின்னர் 7 மணி நேரத்திற்கு பின் அந்த சிறுமி காயங்களுடன் உயிருடன் வெளியில் கொண்டு வர, தந்தை தன் மகளை கட்டியணைத்துக் கொண்டு, கதறி அழுத படி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடினார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்போது அவர் தன் மகளின் கையை பாசத்தோடு முத்தமிட்ட படி பார்த்தார். இந்த புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதேவேளை குறித்த தாக்குதலில் சிறுமியின் தாயார் மற்றும் உடன் பிறந்த நான்கு பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.